தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோரது கூட்டணியில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் விண்ணைத் தொட்டிருந்தது. கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானதோடு, இவர்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலானது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென சுந்தர்.சி இந்தத் திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, தற்போது சிபி சக்கரவர்த்தி அந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார். சுந்தர்.சியின் இந்தத் திடீர் விலகலுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் முதன்முறையாக ஓபனாகப் பேசியுள்ளார்.
சுந்தர்.சியின் பிரம்மாண்ட கனவுத் திட்டமான ‘சங்கமித்ரா’ படத்தைத் தொடங்குவதற்காகவே அவர் ரஜினியின் படத்திலிருந்து விலகிவிட்டதாகக் கூறப்பட்ட தகவல்களை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “சங்கமித்ரா படத்தை இப்போதைக்கு ஆரம்பிக்கும் திட்டம் ஏதுமில்லை, எனவே அதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், தனது அடுத்த இரண்டு வருடங்களுக்கான கமிட்மென்ட்கள் அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், கால்ஷீட் மற்றும் நேரமின்மை காரணமாகவே ரஜினியின் படத்திலிருந்து விலக நேர்ந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சங்கமித்ரா போன்ற பெரிய படத்திற்காகத் தான் தலைவர் 173 கைவிடப்பட்டது என்ற வதந்திகளுக்கு இதன் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.