நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், மக்களது நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன.

காணி அபகரிப்பு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை மையப்படுத்தி, இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது எந்தவொரு தேர்தல் கூட்டணியோ அல்லது இனவாதக் கூட்டணியோ அல்லவென கட்சியின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தக் கூட்டணியில் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், ஜீவன் தொண்டமான், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த தலைவர்கள், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, காணிப் பிரச்சினைகளுக்கு ஒரு குரலாக நின்று சட்டரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கப் பாடுபடுவோம் என உறுதியளித்தனர். நாட்டின் சகல சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வலுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, தமக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் உறுதியாகச் செயற்படப்போவதாகவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.