மட்டக்களப்பு, தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இறுதி வலுவூட்டல் செயலமர்வு இன்று 29.07.2026 வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தாயக ஊற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும், பரீட்சை எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் தொடக்கத்தில் அதிதிகள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கம் ஆகியவை இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அதிதிகளின் உரைகளும், இச்செயலமர்வுக்கு நிதி அனுசரணை வழங்கிய நன்கொடையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.

மட்டக்களப்பு பிரதேசத்தின் பிரபல வளவாளரான திரு.கே.ரிசீகரன் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.
மேலும், மாணவர்களின் கற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த கால வினா-விடை கையேடுகள் மற்றும் கற்றல் கோப்புகள் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய செயலமர்வுக்கு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய பரிபாலன சபை மற்றும் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினரும், வந்தாறுமூலை கண்ணகி சனசமூக நிலையத் தலைவருமான சமூக ஆர்வலர் கி. சந்திரகுமார் ஆகியோர் நிதி அனுசரணை வழங்கியிருந்தனர்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற செயலமர்வுகளுக்கான பிரதான நிதி அனுசரணையினைத் தாயக ஊற்று அமைப்பின் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயக ஊற்று அமைப்பினால் இந்த ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு கட்டங்களாக இச்செயலமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கல்விக் கோட்டம் மற்றும் ஏறாவூர்பற்று கல்விக் கோட்டம் என்பவற்றின் கீழ் உள்ள சுமார் 800 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், தாயக ஊற்று அமைப்பின் உப தலைவருமான த.பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான கா.நாகேந்திரன், சி.வவானந்தன், செங்கலடி குளோபல் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி சர்மினி உதயகுமார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.