ஈரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதலின் பின்னணியில் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவிய இரகசிய உடன்படிக்கையே காரணம் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இந்தியா தனது நட்பு நாடான ஈரானைக் காட்டிக் கொடுத்தது மட்டுமன்றி, இலங்கையையும் சர்வதேச இராஜதந்திரச் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். (தொடர்ந்து வாசிக்க…)
இந்திய இராணுவப் பிரதானியின் அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசிய விமல் வீரவன்ச, “இந்தியக் கடல் எல்லைக்குள் ஈரான் கப்பல்கள் பயணிக்கும் வரை பாதுகாப்பு வழங்கிய இந்தியா, அந்தக் கப்பல்கள் சர்வதேசக் கடல் எல்லைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரேலுடனான பாதுகாப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் கப்பலின் இருப்பிடம் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்குக் கைமாற்றியுள்ளது. விருந்தினராக அழைத்துவிட்டு, அவர்கள் திரும்பிச் செல்லும் வழியை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கும் இவ்வாறான கீழ்த்தரமான செயலை ஒரு நாடு செய்ய முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்குத் தெரியுமா என்பது சந்தேகமே எனத் தெரிவித்த அவர், இந்தியாவின் இத்தகைய செயலால் இலங்கை தேவையற்ற நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். “இந்தியா இலங்கையின் நண்பன் என்று கூறினாலும், இவ்வாறு காட்டிக் கொடுக்கும் வேலையைத்தான் இந்தியா செய்கிறது” என்று அவர் சாடினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் போர்ச் சூழலில் இந்தியாவின் வகிபாகம் குறித்து விமல் வீரவன்ச எழுப்பியுள்ள இந்தப் புகார், இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.