20 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மருந்து மற்றும் போசாக்கு உணவுகள்; 268 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

சீயோன் தேவாலயம், சீயோன் சிறுவர் அபிவிருத்தி நிலையம் மரப்பாலம் ஆகியன இணைந்து செங்கலடிப் பகுதியில் பாரிய மனிதாபிமான உதவித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன. பாஸ்டர் ரொபர்ட் தினேஷ் தலைமையில், முகாமையாளர் ஜோசப் வெஸ்லி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், வறிய நிலையில் வாழும் 20 கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொதிகள் மற்றும் போசாக்கு உணவுகள் வழங்கப்பட்டன. தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட பொதிகள் தயார் செய்யப்பட்டிருந்தன.

அத்துடன், நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு, செங்கலடி பிரதேசத்தில் வாழ்வாதாரம் குறைந்த மற்றும் அன்றாட வருமானத்தை இழந்து தவிக்கும் 268 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளும் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகச் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் க.நாகோந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், இவ்வாறான சமூகப் பணிகளின் அவசியத்தையும் பாராட்டினார். தேவாலயத்தின் இத்தகைய தொடர்ச்சியான மனிதாபிமானப் பணிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
