ஒருமுழச்சோலை ஜீனியஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் கிராம மக்கள் இணைந்து நடாத்திய சித்திரை விளையாட்டுப் போட்டி நிகழ்வு, நேற்று (24) ஜீனியஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தமிழர் கலாசார விழுமியங்களைப் பறைசாற்றும் வகையிலான பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இவ்விழாவில், கிராமிய மணம் கமழும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குப் பெறுமதியான பரிசில்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த விசேட நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும், கௌரவ அதிதிகளாக ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், கா.நாகேந்திரன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் சு.ரகுபரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
