பொலன்னறுவை மாவட்டத்தின் ஜயந்திபுர பகுதியில் 29.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நவீன தபால் நிலையக் கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமை தாங்கித் தொடக்கிவைத்தார்.
ஜயந்திபுர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தரம் II தபால் நிலையமானது, அப்பகுதியிலுள்ள சுமார் 13,300 குடும்பங்களுக்குத் தேவையான துரித மற்றும் மேம்படுத்தப்பட்ட தபால் சேவைகளை வழங்கவுள்ளது. அத்துடன், இப்பகுதியிலுள்ள அரச நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் நவீன முறையிலான தபால் மற்றும் தகவல் தொடர்பாடல் சேவைகளை இது வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தபால் சேவைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நவீன தபால் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.