மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருந்தாளர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
நேற்று (24) செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தாளர் ஒருவர், தனது வாகனத்தை வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த காவலாளிகள் வாகனத்தை நிறுத்த அனுமதி மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மூன்று காவலாளிகள் இணைந்து மருந்தாளர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த மருந்தாளர், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய இரு காவலாளிகள் தலைமறைவாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குரிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.