இலங்கையில் தற்போது நிலவும் கடும் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, எரிபொருள் மானியங்கள் தகுதியுடைய ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெரும் கோடீஸ்வரர்களுக்கு இவ்வாறான சலுகைகள் அவசியமற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)
கல்வித் துறை சார்ந்த சந்திப்பொன்றில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மத்திய கிழக்குப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் இல்லாத வகையில் எரிபொருள் விலையை அதிக சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின்படி, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்கு வழங்காமல், பழைய கையிருப்பில் இருந்த எரிபொருளையும் அதிக விலைக்கு விற்பனை செய்வது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என அவர் சாடினார். “மக்களின் பணத்தால் நிரம்பியுள்ள திறைசேரியைப் பயன்படுத்தி (Overflowing Treasury), பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் எரிபொருள் சலுகைகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
நோரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, அதிக விலையுள்ள எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதன் சுமையை மீண்டும் மக்கள் மீதே சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். முறையான விலைச்சூத்திரத்தை (Price Formula) நடைமுறைப்படுத்தி, தேவையற்ற வரிகளைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் கால உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறி வருவதாகவும் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாகப் போக்குவரத்து, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகள் உயர்ந்து வருவதால், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து வருவதாகக் கவலை வெளியிட்ட அவர், இந்த நிலை தொடர்ந்தால் நாடு மீண்டும் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.