மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிக முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோர்கள் சபையின் (COYLE) 2026 வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், “தற்போதைய நிலவரப்படி எமக்கு டொலர் பற்றாக்குறை இல்லை; எம்மிடம் 7.2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு உள்ளது. இருப்பினும், போர் காரணமாக சர்வதேச விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே எம்மால் எரிபொருள் விநியோகத்தை உறுதியாகக் கணிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)
ஜனாதிபதி தனது உரையில், 2022-ஆம் ஆண்டு நிலவிய நெருக்கடிக்கும் தற்போதைய சூழலுக்கும் உள்ள பாரிய வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். “அன்று எரிபொருள் வாங்க டொலர் இல்லை, ஆனால் இன்று டொலர் இருந்தும் விநியோகப் பாதைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 70 டொலரிலிருந்து 100 டொலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 42% அதிகரிப்பாகும். இதனால்தான் நாம் எரிபொருள் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம்” என அவர் விளக்கமளித்தார். மேலும், மக்கள் தேவையற்ற அச்சத்தினால் எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளதால், வழமையான விற்பனை அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக டீசல் மற்றும் பெற்றோல் விற்பனை பதிவாகியுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
“நாம் ஒரு வெற்றிகரமான பாதையில் சென்றுகொண்டிருந்த வேளையில், இந்த வெளிப்பக்க அதிர்வு எம்மைத் தாக்கியுள்ளது. போர் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால், எந்தவொரு உலக நாடும் எதனையும் கணிக்க முடியாது” என எச்சரித்த ஜனாதிபதி, மாற்று வழிகள் குறித்து நட்பு நாடுகளுடன் பேசி வருவதாகவும் உறுதியளித்தார். விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகளைத் தவிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து நுகர்வைக் குறைக்க வேண்டும் என்றும், இந்த நெருக்கடியை ஒரு தேசமாக ஒன்றாக எதிர்கொள்வோம் என்றும் அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.