இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த இரு வாலிபர்கள், நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் விபத்து அம்பாறை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அட்டாளைச்சேனைப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. கல்முனை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 20 வயதுடைய அட்டாளைச்சேனை இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)
இதேவேளை, மற்றுமொரு அதிர்ச்சிகரமான விபத்து ஹபரணை – மட்டக்களப்பு வீதியின் ரஜஎல பகுதியில் நேற்று இரவு பதிவாகியுள்ளது. பொலன்னறுவை நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போதும் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 20 வயதுடைய அட்டாளைச்சேனை இளைஞர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒரே வயதுடைய இரு இளைஞர்கள் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகிப் பலியான சம்பவம் அட்டாளைச்சேனை மக்களை உலுக்கியுள்ளது.
இந்த இரு விபத்துக்கள் தொடர்பிலும் அக்கரைப்பற்று மற்றும் மின்னேரியா பொலிஸார் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அசுர வேகத்தில் முந்திச் செல்ல முற்பட்டதே இந்த இரு விபத்துக்களுக்கும் பிரதான காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் குறித்துப் பொலிஸார் பொதுமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.