மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானிய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் காயமடைந்துள்ள செய்திக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது போரின்போதும் அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு ஒருபோதும் கேள்விக்குறியாக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உலகளவில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:
- தேசிய முக்கியத்துவம்: வளைகுடா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை இலங்கைக்கு மிக முக்கியமானது. ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அங்கு பணிபுரிவதால், அந்த நாடுகளின் பாதுகாப்பு இலங்கையின் தேசிய நலனுடன் நேரடியாகத் தொடர்புடையது.
- பொதுமக்கள் பாதுகாப்பு: போர்ச் சூழலில் தஞ்சம் தேடி அலையும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.
- உட்கட்டமைப்புத் தாக்குதல்: எவ்விதத் தூண்டுதலும் இன்றி பொருளாதார மையங்கள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகும்.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த இக்கட்டான சூழலில், இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும் என அவர் அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.