ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவிற்குத் தோள் கொடுக்க நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஏனைய சர்வதேசக் கூட்டாளிகள் தயக்கம் காட்டி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்கள் மீது கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது ‘Truth Social’ தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்காவிற்கு இனி எந்த நாட்டின் உதவியும் தேவையில்லை, உண்மையில் எப்போதும் தேவைப்பட்டதே இல்லை” எனத் தெரிவித்துள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)
டிரம்ப் தனது பதிவில், அமெரிக்கா ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டொலர்களை நேட்டோ அமைப்பிற்காகச் செலவழிப்பதாகவும், ஆனால் ஒரு இக்கட்டான அவசரக் காலத்தில் அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ முன்வராதது “ஒருதலைப்பட்சமான வீதி” (One-way street) போன்றது என்றும் விமர்சித்துள்ளார். நேட்டோ நாடுகள் மட்டுமன்றி ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளையும் அவர் பெயர் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார். “அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த நாடு, எமது இலக்குகளை அடைய யாருடைய தயவும் எமக்கு அவசியமில்லை” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகத் தாக்குதல்களைத் தொடங்கின. குறிப்பாக, உலக எரிபொருள் விநியோகத்திற்கு அத்தியாவசியமான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரானின் பிடியிலிருந்து மீட்கவும், எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் நட்பு நாடுகளின் கடற்படை உதவியை டிரம்ப் கோரியிருந்தார். இருப்பினும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் நேரடி இராணுவப் பங்களிப்பை வழங்க மறுத்து, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கே முன்னுரிமை அளிப்பதாக அறிவித்துள்ளன. இந்தச் சூழலிலேயே டிரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான அறிக்கை வெளியாகியுள்ளது, இது சர்வதேச அளவில் அமெரிக்காவின் உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.