முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஒரு திட்டமிட்ட அடக்குமுறை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட மக்கள் சந்திப்புகளின் முதற்கட்டம் இன்று (சனிக்கிழமை) காலியில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஒரு தேசியத் தலைவராக ரணில் நாட்டுக்காக ஆற்றிய சேவைகளை மறந்திருப்பதே தற்போதைய அரசியல் குழப்பங்களுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். (தொடர்ந்து வாசிக்க…)
வஜிர அபேவர்தன தனது உரையில், ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த காலப் பொருளாதாரச் சாதனைகளை விரிவாகப் பட்டியலிட்டார். “பியகம முதல் பல்லேகலை வரையிலான முதலீட்டு வலயங்களை உருவாக்கியது முதல், 2022-இல் நாடு சந்தித்த மிக மோசமான வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கையை மீட்டெடுத்தது வரை ரணிலின் பங்கு அளப்பரியது. 24 மணிநேர மின்சாரம் மற்றும் வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு தலைவரின் அனுபவத்தைப் பயன்படுத்துவதை விடுத்து, அவரைச் சிறையில் அடைக்க முயற்சிப்பது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகிறது” என அவர் சாடினார்.
உலகத் தலைவர்களுடன் ரணில் கொண்டுள்ள நெருக்கமான உறவு இலங்கைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனத் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தங்களைச் சீராக முன்னெடுத்த பெருமை ரணிலையே சாரும் என்றார். காலியில் இன்று ஆரம்பமான இந்த மக்கள் சந்திப்பு நாளையும் தொடரவுள்ள நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ரணில் – நாமல் இரகசியப் பேச்சுக்கள் மற்றும் ரணிலைச் சிறையிலடைக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆகியவற்றுக்கு மத்தியில், வஜிர அபேவர்தனவின் இந்த உரை அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.