இலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் காட்டி வரும் தாமதம் குறித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “யுத்தத்தை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே துணிச்சலுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினார் என்றால், வடக்கு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதனை ஏன் செய்ய முடியாது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (தொடர்ந்து வாசிக்க…)
மனோ கணேசன் தனது உரையில், ஜனாதிபதியின் வடக்கு விஜயங்கள் மற்றும் அங்கு அவர் மக்களுடன் பழகும் விதம் குறித்துச் சுட்டிக்காட்டினார். “ஜனாதிபதி வடக்குக்குச் சென்று மக்களுடன் சுதந்திரமாக நடமாடுகின்றார், புகைப்படங்கள் (Selfies) எடுத்துக் கொள்கின்றார். இது வரவேற்கத்தக்க மாற்றம் தான். ஆனால், புகைப்படங்கள் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த மக்களுக்குரிய ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு அவர் ஏன் தயங்குகின்றார்?” என அவர் வினவினார். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு உள்ள ஒரு தலைவருக்கு தேர்தலை நடத்துவதில் என்ன அச்சம் இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
யுத்தம் முடிவடைந்த கையோடு, சர்வதேச அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு விமர்சனங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடத்தியதை நினைவூட்டிய மனோ கணேசன், அநுர அரசாங்கம் 78 ஆண்டுகால சாபத்தைப் போக்கப் போவதாகக் கூறிக்கொண்டு ஜனநாயக விழுமியங்களைப் பின்னுக்குத் தள்ளுவது நியாயமற்றது என்றார். மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கம் அதனை முன்னுரிமைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவது வடக்கு – கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புறக்கணிக்கும் செயல் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.