மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்களிடமிருந்து அநீதியான முறையில் மேலதிக வருமானத்தை ஈட்டி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபூர் ரஹ்மான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “எரிபொருள் வரிகள் மற்றும் கறுப்புச் சந்தை முதலாளிகளின் உத்திகள் மூலம் அரசாங்கம் குறுகிய காலத்தில் 710 கோடி ரூபா லாபத்தைப் பெற்றுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். (தொடர்ந்து வாசிக்க…)
கடந்த 3-ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக் கூறிவிட்டு, ஆறே நாட்களில் (மார்ச் 9 நள்ளிரவு) விலையை உயர்த்தியது மக்களை ஏமாற்றும் செயல் என முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். “பழைய விலைக்கு வாங்கிய எரிபொருளை, போர்ச் சூழலைக் காட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வது ஒரு அரசாங்கம் செய்யும் வேலையல்ல, இது கறுப்புச் சந்தை முதலாளிகளின் வேலை” என அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், போர் எப்போது முடியும் என ஜனாதிபதி மக்களிடம் கேட்பதை விடுத்து, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் கிண்டலடித்தார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது, “விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த ஒரு அரசாங்கம் எதற்கு? புறக்கோட்டை வியாபாரி ஒருவரே இதனைச் செய்துவிடுவார்” என அநுர குமார பேசியதை நினைவூட்டிய முஜிபூர், இப்போது அவர் செய்வதை ஒரு சாதாரண வியாபாரியும் செய்ய முடியும் எனச் சாடினார். இந்தப் பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எகிறியுள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்தச் சுரண்டல் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வீதியில் இறங்கிப் போராடும் எனவும் அவர் எச்சரித்தார். “மக்களுக்கான அரசு” என்று கூறிக்கொண்டு மக்களின் பணத்தைப் பறிக்கும் இந்த இரட்டை வேடத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.