மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியபுல்லுமலை கிராம மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளைக் கண்டறியும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் நேற்று (14.03.2026) குறித்த கிராமத்திற்கு நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

பெரியபுல்லுமலை கிராம அபிவிருத்திச் சங்கம், கமநல அமைப்பு மற்றும் கிராம மக்கள் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாகவே இந்த விஜயம் அமைந்திருந்தது.

இவ்விஜயத்தின் போது கிராம மக்கள் தங்களின் அன்றாட வாழ்வியலைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் வீதி வசதிகள், தொடர்ச்சியான அச்சுறுத்தலாக விளங்கும் யானை வேலிப் பிரச்சினை,

மக்களின் சில பூர்வீகக் காணிகளுக்குள் வன இலாகா திணைக்களம் எல்லைக் கற்களை இட்டுள்ளமை, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான விசேட வாழ்வாதார உதவித் திட்டங்கள் மற்றும் கரடியனாறு கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட 40 ஏக்கர் குளம் (குமரிக் குளம்) புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, காணி மற்றும் விவசாய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

இந்த விஜயத்தில் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.