இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்குவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய சுற்றறிக்கை அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பரிவேணாதிபதி தேரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை குறித்த விபரங்கள் வருமாறு:
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மேலதிகமாக, தற்போது இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையின்படி, தண்டனை என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவோ எந்தவொரு குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நிலையிலும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்கக் கூடாது எனவும், இந்த உத்தரவை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது. மாணவர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்தும் போது, தண்டனைகளுக்குப் பதிலாக ஆக்கபூர்வமான மற்றும் உளவியல் ரீதியான அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.