இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிமுக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியே இன்றைய நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பகிரங்கமாகச் சாடியுள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குச் சென்று சஹ்ரான் தரப்புக்காக வாதிட்டவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியதோடு, இவ்வாறான நியமனங்கள் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் அநீதி எனவும், இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறையைச் சர்வதேச ரீதியில் கேலிக்குள்ளாக்கும் செயல் எனவும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், நாட்டின் புலனாய்வுப் பிரிவின் பலமாகத் திகழ்ந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே போன்ற அதிகாரிகளை அரசாங்கம் திட்டமிட்டுச் சிறையிலடைத்து பழிவாங்கி வருவதாகக் குறிப்பிட்ட விமல் வீரவன்ச, இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பைப் பலவீனப்படுத்தி, புலம்பெயர் தேசத்திலுள்ள பிரிவினைவாத சக்திகளுக்கே வாய்ப்பாக அமையும் என எச்சரித்தார். “படை வீரர்” என்ற கௌரவமான சொல்லைப் பயன்படுத்துவதற்கே தயங்கும் இந்த அரசாங்கம், பாரம்பரிய கலாசார விழாக்களையும், சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களையும் உதாசீனம் செய்து வருவதாகவும், நாட்டுப்பற்று இல்லாத ஒரு நிர்வாகம் நாட்டை வழிநடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பொருளாதார ரீதியாகவும் இந்த அரசாங்கம் பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு நிலக்கரி, மருந்துப் பொருட்கள் மற்றும் அரிசி விநியோகம் ஆகியவற்றில் பாரிய மோசடிகள் இடம்பெற்று வருவதாகச் சுட்டிக்காட்டினார். கள்வர்களைப் பிடிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகச் சாடிய வீரவன்ச, நாட்டின் இறையாண்மை மற்றும் கலாசார விழுமியங்களை அறிந்த, கொள்கையில் உறுதியான புதிய தலைமைத்துவம் ஒன்றின் தேவை நாட்டுக்கு மிக அவசியமானது எனத் தனது உரையில் மீண்டும் வலியுறுத்தினார்.