மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்ரேலில் பணிபுரியும் 29,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகின்றது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் (Gideon Sa’ar) உடன் நேற்று (மார்ச் 06, 2026) விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கைத் தொழிலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தனது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தற்போது ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பே எமது முதன்மை நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார். அத்துடன், பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலையை இராஜதந்திர ரீதியில் கையாண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். எவ்வித அவசரச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் டெல் அவிவ் (Tel Aviv) நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அங்குள்ள இலங்கையர்களுக்குப் பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.