மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச் சவால்களுக்கு மத்தியில், இலங்கையின் மின்சாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளார். குறிப்பாக, நாட்டின் மின் நுகர்வு அதிகமுள்ள மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (தொடர்ந்து வாசிக்க…)
வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:
மத்திய கிழக்குப் போரினால் சர்வதேச மட்டத்தில் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முறியடிக்க, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் பங்களிப்பு வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதன்படி, அரச சேவையில் மின்சார முகாமைத்துவத்திற்கான புதிய வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தவும், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் மின் நுகர்வை முறைப்படுத்தவும் அந்தந்த நிறுவனங்களுடன் இணைந்து விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய தேவையற்ற அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதைக் கண்டறிந்த ஜனாதிபதி, அவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தினார். இதன் மூலம் ஒட்டுமொத்த மின் நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைப்பதுடன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைகளைப் பின்பற்றி மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். நாட்டின் தற்போதைய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நீர்மின் உற்பத்தி மற்றும் ஏனைய மாற்று வழிகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.