அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று (18) மதியம் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டமையாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும் அதிவேகமாக மோதியுள்ளன.

இவ் விபத்தின் போது சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த 40 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்துகளின் அதீத வேகம் அல்லது கவனக்குறைவு விபத்திற்குக் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.